1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வைத்தியசாலை நிர்வாகத்தின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 21ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு நடைபெற்றது.
இந்நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிர்நீத்த சாரதி சன்முகலிங்கம் அவர்களின் நினைவாக நோயாளி ஒருவருக்கு சக்கர நாற்காலியும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் திரு. சத்தியமூர்த்தி, வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் உயிரிழந்த உத்தியோகத்தர்களின் உறவினர்களென பலரும் கலந்துகொண்டனர்.
1987ஆம் ஆண்டு ஜப்பசி மாதம் 21, 22ஆம் திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் தாக்குதல் மேற்கொண்டவண்ணம் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவ அதிகாரி கேணல் பிரார் தலைமையிலான இராணுவத்தினர் நடத்திய பயங்கரவாத கொலைவெறி தாக்குதலில் 3 வைத்தியர்கள், 2 தாதிகள், 21 பணியாளர்கள், 47 நோயாளர்களென 75ற்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச்சூடு மற்றும் கிரணைட் தாக்குதலுக்குட்பட்டு படுகொலை செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

