யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் ஆனி மாதம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நியமனம் பெற்றுள்ளார்.

1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் 2000ஆம் ஆண்டு கொழும்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பல இடங்களிலும் சமய, கல்வி மற்றும் நிர்வாகப்பணியாற்றியுள்ளதுடன் உரோமில் இறையியல் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தையும் கொழும்பில் கல்வியியல் டிப்ளோமாவையும் ஐக்கிய இராச்சியத்தில் கல்வியியலில் முதுகலைப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமானி, கலைமானி பட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

இவர், 2020ஆம் ஆண்டு ஆடி மாதம் 13ஆம் திகதி அப்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக நியமிக்கப்பட்டு 2020ஆம் ஆண்டு ஆவணி மாதம் 29ஆம் திகதி ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டதுடன் 2024ஆம் ஆண்டு ஆவணி 19ஆம் திகதி மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் நியமனம் பெற்று பணியாற்றிவருகின்றார்.

தற்போதைய ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் ஓய்வு காரணமாக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக பணியாற்றி வந்த இவர் யாழ். மறைமாவட்ட ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தையின் இந்நியமனக்கடிதத்தை தற்போதைய யாழ். மமைறமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் 29ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற குருக்களுக்கான சிறப்பு ஒன்றுகூடலில் வாசித்து தெரியப்படுத்தினார்.

புதிய ஆயராக நியமனம் பெற்றதைத் தொடர்ந்து பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் ஆடி மாதம் 01ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

அன்றைய தினம் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் மற்றும் குருக்களால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்ட பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் மற்றும் குருக்களுடனான கலந்துரையாடலிலும் பங்குபற்றினார்.

பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் யாழ். மறைமாவட்டத்தின் ஆயராக பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு வருகின்ற ஆவணி மாதம் 26ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

By admin