இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் 84ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் யூன் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 22ஆம் திகதி வரை மன்னார் மறைமாவட்டத்தில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெறும் இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள், கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள், கலந்துரையாடல்கள், வெளிக்கள பயணம் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் மன்னார் நகரப்பகுதியில் மருதமடு அன்னையின் சுருபம் அமைந்துள்ள இடத்தில் கொடிகள் ஏற்றப்பட்டு அங்கிருந்து விருந்தினர்கள் கலாச்சார பவனியுடன் மன்னார் நகர கலாச்சார மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
தொடர்ந்து நகர கலாச்சார மண்டபத்தில் கலைநிகழ்வுகளுடன் இணைந்த ஆரம்ப நிகழ்வு நடைபெற்றதுடன் இரவு இசைநிகழ்வு கலையருவி வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், தேசிய இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை கெலன பீரிஸ் அவருடன் இணைந்து ஏனைய மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுக்களின் இயக்குனர்கள் குருக்கள் துறவிகள் மற்றும் 12 மறைமாவட்டங்களிலிருந்தும் வருகைதந்த 120 வரையான இளையோரும் கலந்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து 21ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் கீரி பிரதேசத்தில் அமைந்துள்ள YFC தியான நிலையத்தில் இந்நிகழ்வுகள் நடைபெற்றதுடன் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலைத்திருப்பலியுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.