இரணைப்பாலை வலையன்மடம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித செபமாலை அன்னை ஆலயக் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவ் ஆலய திறப்புவிழா யூன் மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து அழகிய தோற்றத்துடன் அமைக்கப்பட்ட புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் குருக்கள் துறவிகள் பங்குமக்களென ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
புதிய ஆலயத்திற்கான அடிக்கல் 2018ஆம் ஆண்டு அப்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை லியோ அவர்களின் காலத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அவர்களினால் நாட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு தற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் காலத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
வலையன்மடம் புனித செபமாலை அன்னை ஆலயம் 2009ஆம் ஆண்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் குருக்கள் துறவிகள் வைத்தியர்கள் மக்களென ஏராளமானவர்களுக்கு புகலிடம் வழங்கிய இடமாக அமைந்திருந்ததுடன் அருட்தந்தையர்களான ஜேம்ஸ் பத்திநாதன் மற்றும் வசந்தசீலன் ஆகியோர் வெவ்வேறு காலப்பகுதிகளில் நடைபெற்ற எறிகணைத் தாக்குதல்களில் காயமடைந்ததுடன் ஏராளமான மக்கள் இவ்வாலய வளாகத்தில் கொல்லப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.