மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள், மீனவ அமைப்புகள் உள்ளடங்களாக சிவில் அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த கவனயீர்ப்பு பேரணி 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியில் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்தது.
தொடர்ந்து ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இப்பேரணியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன், சமய தலைவர்கள், மன்னார் மாவட்ட மக்கள், வர்த்தகர்களென பலரும் கலந்து கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கெதிரான தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.