உடையார்கட்டு பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித யூதாததேயு ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பங்கின் புனித யூதாததேயு மறைப்பாடசாலை மணவர்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட புதிய பாண்ட வாத்திக்குழுவினரின் அணிவகுப்புடன் ஆலய முன் பிரதானவீதியிலிருந்து ஆலய வளாகத்திற்கு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் அவருடன் இணைந்து குருக்களும் இறைமக்களும் அழைத்துவரப்பட்டனர்.
தொடர்ந்து அழகிய தோற்றத்துடன் அமைக்கப்பட்டிருந்த புதிய ஆலயம் ஆயர் அவர்களினால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன் யாழ். மறைமாவட்ட பங்கொன்றில் மறைப்பாடசாலை மாணவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பாண்ட் வாத்திய குழு இது என்பதுடன் உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலயம் 2008, 2009, ஆண்டு காலப்பகுதிகளில் அங்கு நடைபெற்ற யுத்தத்தில் பல மக்களின் பாதுகாப்பிடமாக அமைந்திருந்ததுடன் வன்னி கியூடெக் நிறுவம் தற்காலிகமாக அவ்வாலய வளாகத்தில் இயங்கிவந்தபோது 2009ஆம் தை மாதம் 30ஆம் திகதி இலங்கை இராணுவத்தினரால் குறிவைக்கப்பட்டு பல்குழல் எறிகணைத்தாக்குதல் நடாத்தப்பட்டு முற்றுமுழுதாக நிர்மூலமாக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.