மண்டைதீவு றோ.க வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த விஞ்ஞான ஆய்வுகூடம் அடங்கலான வகுப்பறை கட்டடத்தொகுதி கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் திரு. டென்சில் சேவியர் சுவைனஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கட்டடதொகுதியை ஆசீர்வதித்து திறந்துவைத்து நினைவுக்கல்லை திரைநீக்கம் செய்துவைத்தார்.
தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் அமையப்பெற்ற லூர்து அன்னை திருச்சொருபத்தை அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
தொடர்ந்து கலைநிகழ்வுகளுடன் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், வடமாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் டிறஞ்சன், தீவக வலய கல்வி பணிப்பாளர் திரு. ஞானசுந்தரன், மண்டைதீவு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் யாழ். மறைமாவட்ட குருவும் வாழ்நாள் பேராசிரியருமான அருட்தந்தை பிலேந்திரன், யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
இக்கட்டத்திற்கான நிதியுதவியை மறைந்த திரு, திருமதி சூசைப்பிள்ளை அன்னரத்தினம் ஆகியோரின் நினைவாக அவர்களின் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.