இலங்கை அரச படையினரால் அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஆவணி மாதம் 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக அங்கு அனுஸ்டிக்கப்பட்டது.

பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அகவணக்கத்துடன் பொதுச்சுடரேற்றப்பட்டு மலரஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

தொடர்ந்து பங்குத்தந்தை தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

2006ஆம் ஆண்டு நிலவிய போர்ச்சூழல் காரணமாக பிலிப்பு நேரியார் ஆலயத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் தஞ்சமடைந்திருந்த மக்களை இலக்குவைத்து ஆவணி மாதம் 13ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டதுடன், 54 பேர் காயமடைந்தனர்.

அப்போது பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண் அவர்கள், காயமடைந்த மக்களை சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்திற்கும், அல்லைப்பிட்டியில் தங்கியிருந்த மேலும் 300 குடும்பங்களை ஊர்காவற்றுறையில் உள்ள புனித மரியன்னை ஆலயத்திற்கும் அனுப்பிவைத்தார்.

இத்தாக்குதல் இடம்பெற்று ஒரு வாரத்தின் பின்னர், ஆவணி மாதம் 20ஆம் திகதி, அருட்தந்தை ஜிம் பிறவுண் அவர்களும் அவருடன் பயணித்த திரு. வின்சன் விமலதாஸ் அவர்களும் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

இவர்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் இதுவரை வெளிப்படுத்தப்படாத நிலையில், அவர்களின் நிலை குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By admin