தர்மபுரம் பங்கின் பிரமந்தனாறு இறை இரக்க ஆண்டவர் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
08ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 11ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
இறை இரக்க பக்தியை முன்னெடுத்து இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது கொட்டில் ஆலயமான பிரமந்தனாறு இறை இரக்க ஆண்டவர் ஆலயம் வன்னியில் நடைபெற்ற இனப்படுகொலை போரின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்து இறைவனின் இரக்கத்தை அனுபவித்த ஓர் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாக அமைந்திருப்பதுடன் இவ்வாலயத் திருநாளில் யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகைதந்து வழிபாடுகளில் பக்தியுடன் பங்குகொள்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

