சமூகத்தில் ஊனமுற்றோரை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை கிளறேசியன் சபையினரால் நடாத்தப்படும் VAROD – வன்னி மாற்றுத்திறனாளிகளுக்கான வலுவூட்டல் அமையத்தினால் பம்பைமடுவில் அமைக்கப்பட்டு வந்த பாரம்பரிய உணவுப்பொருள் விற்பனை நிலையம் கடந்த மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
VAROD இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “உணவே மருந்து” எனும் தொனிப்பொருளில், பாரம்பரிய ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களை ஊக்குவிப்பதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் இது சார்ந்த விழிப்புணர்வு திட்டமொன்றை நெறிப்படுத்தி அதன் விளைவாக இந்நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய ஆரோக்கியமான உணவு வகைகளை தரமாக அமையத்திலும் அமையத்தின் பயனாளிகள் மத்தியிலும் உற்பத்தி செய்து அவற்றை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைசெய்வதற்கான ஒரு தளமாக இந்நிலையம் அமைந்துள்ளதுடன் கடந்த 16 வருடங்களாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 5450 மாற்றுத்திறனாளிகளுடன் VAROD அமையம் பயணித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், சமூக சேவை உத்தியோகஸ்தர், கிராம சேவகர், கிளாரட் நேயக முதல்வர் மற்றும் அமையத்தின் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

By admin