திட்டமிடப்பட்ட முறையில் மிக வேகமாக அழிக்கப்பட்டு வரும் மன்னார் மாவட்ட மன்னார் தீவின் அழிவிற்கு மக்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க கூடாதென மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழு 21ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அருட்தந்தை மார்க்கஸ் அவர்கள், எவ்வித அனுமதியுமின்றி கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி இந்நடவடிக்கைகளுக்காக மக்களின் காணிகள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதையும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மக்களின் எதிர்கால பிரச்சினைகளை சற்றும் சிந்திக்காமல், இலாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு அரச திணைக்களங்களின் ஆதரவுடன் செயல்படும் பல்தேசிய நிறுவனங்களின் இந்நடவடிக்கைகளால் மக்களின் வாழ்வாதாரமும், எதிர்காலமும் பாதிக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னார் மக்களுக்கு எதிராக செயற்பட்டுவரும் இரண்டு கனிய மண் அகழ்வு நிறுவனங்களுக்கும், மூன்று காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும் எவ்வித ஒத்துழைப்பையோ உதவிகளையோ வழங்க வேண்டாமென மக்களை கேட்டுக்கொண்டுள்ள அருட்தந்தை மார்க்கஸ் அவர்கள் குறித்த திட்டங்களுக்கு மக்கள் ஒரு போதும் அனுமதி வழங்கக் கூடாதுதெனவும் அனைவரும் ஒன்றினைந்து இதற்கு எதிராக போராட முன் வர வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

By admin