வட மாகாண சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் யாழ். போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம், கேன் நிறுவனம் ஆகியவை இணைந்து முன்னெடுத்துவரும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் விழிப்புணர்வு செயல்திட்டம் கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன், வட்டக்கச்சி, தர்மபுரம், பூநகரி, ஜெயபுரம் மற்றும் வேரவில் ஆகிய பிரதேசங்களில் பிரதேச வைத்தியசாலைகளூடாகச் நடைபெற்று வருகின்றது.
இத்திட்டத்தின் ஒரு அங்கமாக கிளிநொச்சி பிராந்திய சேவைகள் பணிமனையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட மாபெரும் இலவச மருத்துவ முகாம் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இலக்கம் 01 அ.த.க பாடசாலையில் யூன் மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காலை 8 மணிதொடக்கம் மதியம் 1 மணிவரை நடைபெற்ற இம்முகாமில் கலந்துகொண்ட 241 பேர்களில் அனைத்துப் பெண்களுக்கும் பெண்ணியல் தொடர்பான சிகிச்சைகளும் பங்குபற்றிய இருபாலருக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி முன்னணி வைத்தியர்களால் பல், கண் தொடர்பான ஆலோசனைகள் பரிந்துரைகளுடன் பெண்ணியல் புற்றுநோய் நிபுணர்களின் பரிசோதனைகளும் சிபாரிசுகளும், வழங்கப்பட்டன.
அத்துடன் இம்மருத்துவ முகாமில் குழந்தை மருத்துவம், தோல் சிகிச்சை, இருதய பரிசோதனைகளும் இடம்பெற்றதுடன் நோயாளர்களுக்கு மருந்துகளும் வழங்கப்பட்டன.