தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் திருவிழிப்பு ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட இறைதியான குழுவினரின் ஒழுங்குபடுத்தலில் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மைதானத்திலும் திருவிழிப்பு ஆராதனை நடைபெற்றது.

அன்றையதினம் மாலை ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இடம்பெற்ற இத்திருவிழிப்பு ஆராதனையில் யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் வெவ்வேறு துறவற சபையினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் வழிபாடுகளை முன்னெடுத்தனர்.

திருச்செபமாலையுடன் ஆரம்பமாகிய இவ் ஆராதனையில் திருவிழிப்பு திருப்பலி இடம்பெற்றதை தொடர்ந்து அதிகாலை 3 மணி வரை ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டு 3 மணிக்கு நற்கருணை ஆராதனையும் 4 மணிக்கு தூய ஆவியார் திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் இத்திருவிழிப்பு ஆராதனையில் ஏராளமான மக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

By admin