புதிய திருத்தந்தையாக தெரிவுசெய்யப்பட்ட திருத்தந்தை 14ஆம் லீயோ அவர்கள் திருத்தந்தையாக தெரிவுசெய்யப்பட்ட சில மணிநேரங்களில் மக்கள் முன் தோன்றி ஊருக்கும் உலகிற்குமான ஊர்பி எத் ஓர்பி எனும் தனது முதல் சிறப்பு ஆசீரையும் உரையையும் வழங்கினார்.
இலட்சக்கணக்கான மக்கள் முன் வத்திக்கான் மேல்மாடத்தில் தோன்றிய திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், உங்கள் அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும்! என்று இத்தாலிய மொழியில் கூறி தனது முதல் வாழ்த்துரையையும் ஆசீரையும் மக்களுக்கு வழங்கி அமைதி பற்றிய கருத்துக்களை அதிகமாக வலியுறுத்தினார்.
அன்பான சகோதர சகோதரிகளேயென மக்களை விழித்து நல்லாயன் உயிர்த்த இயேசு கிறிஸ்துவின் அமைதியின் முதல் வார்த்தைகளை கூறி தனது உரையை ஆரம்பித்த திருத்தந்தை அவர்கள் அமைதியின் வாழ்த்து எல்லோர் இதயங்களிலும் நுழைந்து, எல்லா குடும்பங்களுக்கும், உலகின் எல்லா திசைகளில் இருக்கும் மக்கள் அனைவருக்கும், பூமியெங்கும் சென்றடைய வேண்டுமென்ற தன் ஆசீரையும் வெளிப்படுத்தினார்.
உயிர்த்த கிறிஸ்துவின் அமைதி, ஆயுதங்களைக் களையும் அமைதி, தாழ்ச்சி மற்றும் விடாமுயற்சியுள்ள அமைதி. நம் அனைவரையும் அளவின்றி அன்பு செய்யும் கடவுளிடமிருந்து இந்த அமைதி வருகிறதென தனது மெலிதான மற்றும் உறுதியான குரலால் உரோம் நகர மக்களுக்கு ஆசீர் அளித்த மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் குரல் இன்றும் நமது காதுகளில் கேட்டுக்கொண்டிருக்கின்றதென கூறிய திருத்தந்தை அவர்கள் உரோம் நகரையும் உலகெங்கிலும் உள்ள மக்கள் அனைவரையும் ஆசீர்வதித்து முழு உலகத்திற்கும் தனது ஆசீரை, உயிர்ப்பு ஞாயிறன்று காலை வழங்கிய மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அதே ஆசீரை நானும் இன்று உங்களுக்குக் வழங்குகின்றேனென எடுத்துரைத்து மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றிகூறினார்.
தொடர்ந்து திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றலாக அனைவருடனும் இணைந்து நடக்கவும், எப்போதும் அமைதி மற்றும் நீதியைத் தேடும் கூட்டொருங்கியக்கத் திருஅவையாகவும், இயேசு கிறிஸ்துவுக்கு உண்மையுள்ளவராகவும், பயமின்றி நற்செய்தியை அறிவிக்கவும், மறைப்பணியாற்றவும் தன்னைத் தேர்ந்தெடுத்த கர்தினால்களுக்கு நன்றிகூறிய திருத்தந்தை அவர்கள் உரோம் திருஅவையை சிறப்பாக வாழ்த்தி மறைப்பணியாற்றும் திருஅவையாக, பாலங்களை உருவாக்கும் திருஅவையாக, திறந்த கரங்களுடன் இருக்கும் இவ்வத்திக்கான் வளாகத்தைப் போல எப்போதும் திறந்திருக்கும் உரையாடலை எவ்வாறு உருவாக்குவது என்பதை நாம் ஒன்றாக இணைந்துத் தேட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் பெருவின் சிக்லாயோவின் தன் அன்பான மறைமாவட்ட மக்களுக்கு வாழ்த்துக்கூறி, இயேசு கிறிஸ்துவின் உண்மையுள்ள திருஅவையாக, நம்பிக்கையுள்ள மக்கள் தங்கள் ஆயருடன் இணைந்து நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டதற்காக நன்றிதெரிவித்தார்.
தொடர்ந்து உரோம், இத்தாலி, உலகம் முழுவதிலுமிருந்துவரும் சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களென தெரிவித்த திருத்தந்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து நடக்கும் கூட்டொருங்கியக்கத் திருஅவையாக, அமைதி மற்றும் நீதியைத் தேடுகின்ற, துன்பப்படுபவர்களுக்கு நெருக்கமாக இருக்க முயலுகின்ற ஒரு திருஅவையாக இருக்க விரும்புவோமெனவும் கேட்டுக்கொண்டார்.
இன்று பொம்பே அன்னை மரியின் விழாவென குறிப்பிட்டு நமது அன்னை மரியா எப்போதும் நம்முடன் நடக்கவும், நெருக்கமாக இருக்கவும், தனது பரிந்துரை மற்றும் அன்பினால் நமக்கு உதவவும் விரும்புகிறாரென சுட்டிக்காட்டி இப்புதிய பணிக்காக, முழு திருஅவைக்காக, உலக அமைதிக்காக நாம் ஒன்றாக இணைந்து நமது தாயான அன்னை மரியாவை நோக்கி செபிப்போமென கூறி தனது உரையை நிறைவு செய்த திருத்தந்தை அவர்கள் அருள்மிகப்பெற்ற மரியே வாழ்க என்ற செபத்தை இறைமக்கள் கூட்டத்தோடு இணைந்து செபித்தார்.
அதன்பின் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் ஊருக்கும் உலகிற்குமான நிறைபலன் தரக்கூடிய ஊர்பி எத் ஓர்பி எனும் சிறப்பு ஆசீரினையும் வழங்கினார்.
