மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச ரீதியில் சாதனை புரிந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யூலை மாதம் 23ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் டிலாசால் சபை அருட்சகோதரர் சந்தியாகு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் சாதனையாளர்கள் மன்னார் பேருந்து நிலையத்தில் வைத்து மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டு பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டு அங்கு அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இளையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்களான சமிசன் பர்னாந்து, பிரைசன், டனுமிதன், டடிசன் ஆகியோருடன் ஜூனியர் கெமிஸ்ட்ரி ஒலிம்பியாட் (Junior Chemistry Olympiad) போட்டியில் சர்வதேச ரீதியாக 80 நாடுகளுடன் போட்டியிட்டு மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட மாணவன் அரோன் டியோறி, தேசிய மட்ட ஆங்கில கட்டுரை போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட ஆறாம் தர மாணவன் திவ்யன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மன்னார் உதவி மாவட்ட செயலாளர் டிலிசன் பயஸ், மன்னார் வலய கல்வி திணைக்கள உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஜேக்கப், மன்னார் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பிறின்ஸ் லெம்பேட், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் வின்சன், மன்னார் மாவட்ட Roll Ball சங்க தலைவர் பொறியியலாளர் விமலேஸ்வரன், பாடசாலையின் பிரதி அதிபர் அஜித் ருக்சன் டலிமா, பொதுமக்கள், நலன் விரும்பிகளென பலரும் கலந்துகொண்டனர்.