இலங்கையில் நீடித்த அமைதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதிலுள்ள சவால்களை மேற்கொள்ள சர்வதேச பொறிமுறையூடான தீர்வே அவசியமென்பதை வலியுறுத்தியும், அதனை ஐக்கிய நாடுகள் சபை பரிசீலித்து 60வது அமர்வில் ஒரு புதிய தீர்மானத்திற்கு ஜ.நாவின் அவசர தலையீட்டை கோரியும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் திரு. வோல்கர் டர்க் அவர்களுக்கு குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்கான இயக்கம் வேண்டுகோள் கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளது.
இலங்கையில் நடந்த தமிழர்களின் இனப்படுகொலைக்கான தீர்வு, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிக்க சர்வதேச பொறிமுறையை நிறுவுதல், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி, செம்மணி, கொக்குதொடுவாய், மன்னார் சதொச, திருக்கேதீஸ்வரம் போன்ற பாரிய மனித புதைகுழிகளுக்கு பொறுப்புக்கூறல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் நிலங்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தும் நில அபகரிப்பை தடுத்தல், அரசியல் கைதிகளாக நீண்டநாள் தடுப்புக்காவலில் உள்ளவர்களை விடுவிப்பதற்கான பொறிமுறையை உருவாக்குதல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டம் போன்ற கடுமையான சட்டங்களை ரத்து செய்தல், பாலியல் வன்முறை மற்றும் குற்றவாளிகளுக்கான நீதி தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு, அரச ஆதரவுடன் கூடிய சிங்கள பௌத்த மத பிரச்சாரத்தை தவிர்த்தல் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி சிரேஸ்ட சட்டத்தரணிகளான திரு. கே.எஸ் ரட்ணவேல், திரு. வி. புவிதரன், திரு. ந.காண்டீபன், திரு. ம. யூட் டினேஸ், திரு. வி. எஸ். நிரஞ்சன், திருமதி சுகந்தி ராஜகுலேந்திரா, செல்வி றனிதா ஞானறாஜ் உள்ளடங்கலாக வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பல அருட்தந்தையர்கள், குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்கான இயக்க அங்கத்தவர்கள் கையொப்பமிடப்பட்ட இக்கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் மக்களால் நீண்டகாலமாக கோரப்பட்ட அரசியல் சுயாட்சியைப் பகிர்ந்தளிப்பது குறித்த தனது உறுதிமொழிகளை நிறைவேற்ற தேவையான அரசியலமைப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் ஒரு அரசியல் தீர்வைத் தொடர அரசாங்கம் தவறியதை மீண்டும் வலியுறுத்திய குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்கான இயக்கம் அத்தகைய அதிகாரப் பகிர்வு உண்மையான நல்லிணக்கத்திற்கும், அனைத்து மக்களும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கும் ஒருங்கிணைந்ததாகும் என்பதையும் இவ்விண்ணப்ப கடிதத்தில் கோடிட்டுகாட்டியுள்ளனர்.