கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டு, யூன் மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நற்கருணைப்பவனிகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
யாழ். மறைக்கோட்டத்தில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நற்கருணை பவனி யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி குருநகர் புனித யாகப்பர் ஆலயம் ஊடாக யாழ். புனித மரியன்னை பேராலயத்தை சென்றடைந்தது.
இப்பேரணி சென்ற ஆலயங்களில் சிறப்பு நற்கருணை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களால் நற்கருணை ஆசீரும் வழங்கப்பட்டது.
அத்துடன் உருத்திரபுரம் பங்கில் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற பவனி புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலயத்தின் ஊடாக கனகபுரம் புனித யூதா ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை ஆசீருடன் நிறைவடைந்தது.
மேலும் இளவாலை பங்கில் பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நற்கருணை பவனி புனித அன்னாள் ஆலயத்தில் ஆரம்பமாகி புனித யூதாததேயு ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை ஆசீருடன் நிறைவடைந்தது.
இப்பேரணிகளில் ஏராளமான மக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.