யாழ். திருமறைக்கலாமன்றத்தின் “கலைமுகம்” கலை இலக்கிய சமூக இதழின் 80 ஆவது இதழ் அமுத மலராக அண்மையில் வெளிவந்த நிலையில் அவ் இதழிற்கான உரையாடல் அரங்கு மார்கழி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.
உளவளத்துணையாளரும் கலை இலக்கிய ஆர்வலருமான திரு. நவராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மனிதவள முகாமையாளரும் உளவள ஆய்வாளருமான ரக்ஸானா ஸரிபுத்தீன் மற்றும் கலை இலக்கிய விமர்சகர் திரு. விமலன் ஆகியோர் அமுதமலரில் வெளிவந்த சிறுகதைகள் குறித்தும் யாழ் பல்கல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் திரு. றகுராம் அவர்கள் நேர்காணல் மற்றும் பத்தி குறித்தும் எழுத்தாளரும் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை ஆசிரியருமான திரு. குகபரன், யாழ். பல்கைலைக்கழக இந்து நாகரிகத்துறை தலைவர் செல்வமனோகரன் ஆகியோர் கட்டுரைகள் குறித்தும் எழுத்தாளரும் ஆசிரியருமான குணேஸ்வரன் அவர்கள் கவிதைகள் குறித்தும் உரைகள் வழங்கியதுடன் வாசகர்கள் சார்பில் கவிஞர் சோ பத்மநாதன் மற்றும் ‘அறிந்திரன்’ இதழ் ஆசிரியர் கணபதி சர்வானந்தா அவர்களும் கருத்துரை வழங்கியிருந்தனர்.
ஏற்புரையை இதழாசிரியர் திரு. செல்மர் எமில் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் கலைமுகம் இதழின் வாசகர்கள், படைப்பாளர்கள் ஆர்வலர்களென பலரும் கலந்துகொண்டனர்.
‘கலைமுகம்’ இதழ் கலை, இலக்கியம், நாடகம், ஓவியம், உட்பட பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நூல் மதிப்பீடுகள், பத்தி என பல்வேறு விடயங்களையும் தாங்கி 1990ஆம் ஆண்டு முதல் திருமறைக் கலாமன்றத்தால் தொடர்சியாக வெளியிடப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

