திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியாக பணியாற்றிய பேரருட்தந்தை பிறாயன் உடகுவே அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி திருத்தந்தை அவர்களால் எத்தியோப்பியா நாட்டிற்கான திருத்தூது பிரதிநிதியாக பணிமாற்றம் செய்யபட்டிருந்த நிலையில் இலங்கையில் தனது பணியை நிறைவுசெய்துகொண்டு 31ஆம் திகதி வத்திக்கான் திரும்பியுள்ளார்.
பேரருட்தந்தை பிறாயன் உடகுவே அவர்கள் 2020ஆம் ஆண்டு அப்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு கடந்த 5 வருடங்களாக இலங்கை திருஅவைக்கும் வத்திக்கான் தலைமைத் திருஅவைக்கும் இடையில் சிறந்த உறவுப் பாலமாய் திகழ்ந்து பணியாற்றியுள்ளார்.
இவர் தனது பணிக்காலத்தில் மறைமாவட்டங்களுக்கான மேய்ப்புப்பணி விஜயங்களை மேற்கொண்டு குருக்கள் துறவிகள் இறைமக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி திருத்தந்தையின் அன்பையும் கரிசனையையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இலங்கைக்கான பணியை நிறைவுசெய்துகொண்டு வத்திக்கான் செல்லும் இவர் தொடர்ந்து எத்தியோப்பியா நாட்டிற்கு சென்று தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.
அத்துடன் இலங்கைக்கான வத்திக்கான் தூதரகத்தின் துணைத்லைவராக பணியாற்ற மொன்சிஞ்ஞோர் ராபர்தோ லுச்சினி அவர்கள் இலங்கைக்கு வருகைதந்து தனது பணிப்பொறுப்பை ஏற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.