இறைபதமடைந்த யாழ். மறைமாவட்ட குருவாகிய அருட்தந்தை மாற்கு றெஜிஸ் இராசநாயகம் அவர்களின் விண்ணகப்பிறப்பின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு யூன் மாதம் 09ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குனரும், ஆசிரிய ஆலோசகருமான திரு. யோன்சன் இராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் அருட்தந்தை மாற்கு றெஜிஸ் இராசநாயகம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
தொடர்ந்து அருட்தந்தை அவர்களின் பணிவாழ்வை சித்தரிக்கும் “அருட்பணியின் நாயகன்” நூல் வெளியீடு இடம்பெற்றதுடன் நூலுக்கான நயப்புரையை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்கள் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும், திருக்குடும்ப கன்னியர் சபை யாழ். மாகாண முதல்வி அருட்சகோதரி தியோபின் குருஸ் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டதுடன் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்தந்தை அவர்களின் உறவினர்களென பலரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
அருட்தந்தை றேஜிஸ் ராஜநாயகம் அவர்கள் கிளிநொச்சி, நாரந்தனை, புதுக்குடியிருப்பு, மன்னார் விடத்தல் தீவு ஆகிய பங்குகளில் பங்குப் பணியாற்றியுள்ளதுடன் நீண்டகாலமாக யாழ். பல்கலைக்கழக ஆன்மீக குருவாகவும் கடமையாற்றியுள்ளார்.
அத்துடன் புனித சவேரியார் குருத்துவக்கல்லூரி விரிவுரையாளராகவும், புனித மடுத்தீனார் சிறிய குருமட ஆன்மீக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளதுடன் 10ற்கும் அதிகமான ஆன்மீக, உளவியல் நூல்களையும் எழுதியுள்ளார்.
சிந்தனையாளராக எழுத்துத்துறையில் ஈடுபாடுகொண்ட இவர் பாதுகாவலன் பத்திரிகையில் மிக நீண்டகாலமாக ஆன்மீக கட்டுரைகளை எழுதியுள்ளதுடன் அர்த்தமுள்ள ஆன்மீகம் எனும் தலைப்பில் யாழ் மறை அலை தொலைக்காட்சியில் தொடர் நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார்.