செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் முதற்குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பணியாற்றி இறந்துபோன அருட்தந்தை ஜோண் லொறற் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு தை மாதம் 22ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
திருப்பலியை இளவாலை புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் கட்டைக்காடு வெற்றிலைக்கேணி பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் மற்றும் அருட்தந்தை ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து செபித்தனர்.
வழிபாடுகளை அருட்தந்தை ஜோன் லொறற் ஞாபகார்த்த கல்வி நிலைய மாணவர்கள் சிறப்பித்தனர்.
திருப்பலி நிறைவில் கல்வி நிலையத்திலிருந்து தரம் ஒன்றிற்கு செல்லும் மாணவர்களுக்கான ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அருட்தந்தை ஜோண் லொறற் அவர்களின் உருவச்சிலைக்கு பங்குத்தந்தை அவர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கமும் இடம்பெற்றது.
தொடர்ந்து அருட்தந்தை ஜோண் லொறற் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் சேமக்காலையை தரிசித்து அங்கு அருட்தந்தைக்கான அஞ்சலி நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டன.
1995ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தை ஜோண் லொறற் அவர்கள் அதேவருடம் யாழ். குடாநாட்டில் ஏற்பட்ட மாபெரும் இடப்பெயர்வினால் பாதிக்கப்பட்டு கொடிகாமம் கச்சாய் பகுதியில் குடியேறிய மக்களுக்கு பணியாற்றி வந்தநிலையில் செப்ரிசீமியா நோயினால் பாதிக்கப்பட்டு 1996ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி மரணமடைந்தார்.

