யாழ்ப்பாணம் பொதுநூலகம் சிங்கள காடையர்களால் எரிக்கப்பட்டபோது அதனைப்பார்த்து மாரடைப்பால் மரணமடைந்த அருட்தந்தை சிங்கராயர் தாவீது அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை தும்பளையில் நடைபெற்றது.

பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தும்பளை புனித மரியன்னை சனசமுக நிலையத்தின் ஏற்பாட்டில் நிலைய தலைவர் திரு. ஜெயரட்ணம் கட்சன் அனோஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிதாக அடித்தளமிடப்பட்டு கூரை அமைக்கப்பட்ட அருட்தந்தையின் உருவச்சிலை திறப்புவிழாவும் பல்வேறு பரிட்சைகளில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்புக்களும் நடைபெற்றன.

புதிதாக அடித்தளமிடப்பட்டு கூரை அமைக்கப்பட்ட அருட்தந்தையின் உருவச்சிலையை அருட்தந்தை கிருபாகரன் அவர்கள் திறந்துவைத்தார்.

தொடர்ந்து அருட்தந்தையின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் 2024ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள், 2023 கா.பொ.த சாதாரணதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் மற்றும் மறையறிவு போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் நடைபெற்றன.

1981ஆண்டு மே மாதம் 31 திகதி இரவு நேரத்தில் தமிழர் பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளின் போது யாழ்ப்பாண நகரில் உள்ள முக்கிய சந்தை, வணிக நிறுவனங்கள், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், யாழ்ப்பாணப் பொது நூலகம், ஆகியன சிங்கள காடையர்களால் முற்றாக எரியூட்டு அழிக்கப்பட்டன.

இம்மாபெரும் துயரநிகழ்வு 20ம் நூற்றாண்டின் இன, கலாச்சார அழிப்புகளின் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது.

இவ்வழிப்பு இடம்பெற்ற காலத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் 97,000 வரையான அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்ததுடன் இந்நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியாக் காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin