மட்டக்களப்பு புனித மரியாள் ஆலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 37வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஒன்றிய செயலாளர் அருட்தந்தை ஜெகதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து ஆலயத்திலுள்ள அருட்தந்தையின் கல்லறையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கமும் நினைவுரைகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் பல்சமய தலைவர்கள், ஒன்றிய அங்கத்தவர்கள், அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களென பலரும் கலந்து அருட்தந்தைக்கு அஞ்சலி செலுத்தினர்.

1985ஆம் ஆண்டு யுத்த காலப்பகுதியில் துன்புறுத்தப்படும் மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பான மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழு தலைவராக இருந்த அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்கள் பலத்த சவால்கள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தளராது பணியாற்றி கைதுகள் செய்யப்பட்ட அப்பாவிகளுக்காக தனது உயிரையும் துச்சமென மதித்து இராணுவ முகாம்களுக்குச் சென்று அவர்களின் விடுதலைக்காக பரிந்து பேசியவர்.

அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்கள் 1988ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06ஆம் திகதி தனது பங்குப்பணிமனையில் இருந்த வேளை இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் சுட்டுக்கொல்லப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin