யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் ஹப்புத்தளை மற்றும் புத்தளம் பிராந்நிய மன்ற இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட அரங்க ஆற்றுகை ஊடான நல்லிணக்கத்தை நோக்கிய ஒன்றிணைவு நிகழ்வு 31ஆம் திகதி சனிக்கிழமை ஹப்புத்தளை திருமறைக்கலாமன்றத்தில் நடைபெற்றது.
ஹப்புத்தளை திருமறைக்கலாமன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இச்சிறப்பு நிகழ்வில் யாழ். திருமறைக்கலாமன்ற கலைஞர்களான திரு. தைரியநாதன் யஸ்ரின் ஜெலூட் மற்றும் திரு. கரன்சன் ஜெகன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள், தலைமைத்துவ மற்றும் ஆளுமை விருத்தி செயற்பாடுகள் ஊடாக இளையோரை நெறிப்படுத்தினர்.
தொடர்ந்து ஹப்புத்தளை மற்றும் யாழ்ப்பாண திருமறைக்கலாமன்ற மன்ற உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் அன்றைய தினம் மாலை ஹப்புத்தளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடைபெற்றது.
ஹப்புத்தளை திருமறைக்கலாமன்ற இணைப்பாளர் திரு. ஐசாக் நியூட்டன் அவர்களின் தலைமையில் யாழ். திருமறைக்கலாமன்ற தேசிய இணைப்பாளர் திரு. சூரியம் சதீஸ்குமார் அவர்களின் வழிப்படுத்தலுடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் ஹப்புத்தளை பங்குத்தந்தை அருட்தந்தை மேர்வின் சுதர்சன், உதவி பங்குத்தந்தை றெபோட் கிளாறட் திருமறைக்கலாமன்ற உதவி நிர்வாக இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹப்புத்தளை புனித செபஸ்ரியார் ஆலயத்தில் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் திருப்பலி இடம்பெற்றதுடன் திருப்பலியை தொடர்ந்து ஹப்புத்தளை மற்றும் நுவரேலியா பிரதேசங்களிலுள்ள பிரசித்திபெற்ற இடங்களை தரிசிக்கும் கள பயண நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளில் யாழ். திருமறைக்கலாமன்ற அங்கத்தவர்கள், யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய பணியாளர்கள் கலந்துகொண்டனர்.