செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனித புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் தன்னார்வ அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட அணையா விளக்குப் கவனயீர்ப்பு போராட்டம் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகி 25ஆம் திகதி வரை யாழ். செம்மணி வளைவுப் பகுதியில் நடைபெற்றது.

1996ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் செம்மணி பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றி ஆரம்பித்துவைக்கப்பட்ட இப்போராட்டத்தின் முதல் இரண்டு நாட்களிலும் சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதம், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான செய்திப் பட கண்காட்சி, மக்கள் கையெழுத்து திரட்டு, செம்மணி மனிதப் புதைகுழியோடு தொடர்புபட்ட கதை, கவிதை நாடக அளிக்கை என்பனவும் 25ஆம் திகதி மூன்றாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றன.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் யாழ். மாவட்ட சர்வமத பேரவை அங்கத்தவர்கள், சமய தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இப்போராட்டத்தின் இறுதி நாளன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து, செம்மணி புதைகுழிகளை நேரில் பார்வையிட்டு போராட்டக்காரர்களைச் சந்தித்து புதைகுழிகள் தொடர்பான தகவல்களைக் கேட்டறிந்ததுடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட “அணையா தீபத்திற்கு” முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

By admin