முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பீடப்பணியாளர்களுக்கான சிறப்பு நிகழ்வு மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் கடந்த 18ஆம் 19ஆம் 20ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆண்கள் விடுதியில் நடைபெற்றது.
18ஆம் திகதி வெள்ளிக்கிழமை அளம்பில் பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியை தொடர்ந்து முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்கள் நிகழ்வுகளை ஆரம்பித்துவைத்தார்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இப்பாசறை நிகழ்வில் ஆசிரியர் திரு. றோமியல் மற்றும் அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை றமேஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கருத்தமர்வுகள், குழுச்செயற்பாடுகள், யோகாசனப் பயிற்சி, தியானங்கள், காற்பந்தாட்ட போட்டி, கலைநிகழ்வுகள், தீப்பாசறை, பரிசளிப்பு நிகழ்வுகள் என்பவற்றினூடாக மாணவர்களை வழிப்படுத்தினர்.
இப்பயிற்சி பட்டறை நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் அருட்தந்தை றொபின்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.
இப்பயிற்சி பட்டறையில் முல்லைத்தீவு மறைக்கோட்ட பங்குகளிலிருந்து 150 வரையான பீடப்பணியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தார்கள்.

By admin