அனுராதபுர மறைமாவட்ட முதற்குருவும் மறைமாவட்ட முன்னாள் குருமுதல்வருமான அருட்தந்தை அன்று அந்தோனி அவர்கள் கடந்த 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

யாழ். மறைமாவட்டம் இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தைச் சேர்ந்த இவர் இளவாலை கன்னியர் மடம், இளவாலை றோ.க.த.க பாடசாலை, புனித ஹென்றியரசர் கல்லூரி ஆகியவற்றில் தனது ஆரம்பக் கல்வியைக்கற்று தொடர்ந்து கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் குருத்துவக் கல்வியை நிறைவு செய்து 1984ஆம் ஆண்டு ஆயர் பேரருட்தந்தை ஜோய் குணவர்த்தன அவர்களால் அனுராதபுர மறைமாவட்ட முதற்குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

இவர் பொலன்னறுவை ஹிங்கொரங்கொட, மதவாச்சி ஆகிய பங்குகளில் பணியாற்றியுள்ளதுடன் அனுராதபுர பேராலய பங்குத்தந்தையாகவும் கலா ஓயா யாத்திரைத்தல பரிபாலகராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் தனது பணிக்காலத்தில் அனுராதபுர மறைமாவட்டத்தின் மறைக்கல்வி நிலையம், சமூக தொடர்புசாதன நிலையம், குடும்ப வள நிலையம் ஆகியவற்றில் இயக்குனராகவும் மறைமாவட்டக் குருமுதல்வராகவும் சேவையாற்றியுள்ளார்.

இவரின் பணிவாழ்விற்காக ஆண்டவருக்கு நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin