2047693_Articoloநவ.16,2017. இறையாட்சி, கண்கவர் கண்காட்சியோ, கேளிக்கையோ, விளம்பரமோ அல்ல, நாம் தீட்டும் மேய்ப்புப்பணி திட்டங்களால் உருவாவதில்லை, மாறாக, தூய ஆவியார் அதனை வளர்க்கிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை நிறைவேற்றியத் திருப்பலியில், லூக்கா நற்செய்தி 17ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ள நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மறையுரை வழங்கினார் திருத்தந்தை.

“இறையாட்சி எப்போது வரும்?” என்று பரிசேயர் கேட்ட கேள்வி, திருமுழுக்கு யோவான் உட்பட பலரது மனதில் எழுந்த கேள்விதான் என்று குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறையாட்சி உங்கள் நடுவே உள்ளது என்பதே இயேசு வழங்கும் பதில் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதோ, இங்கே, இன்றே இறையாட்சி வந்துள்ளது என்பதை, நாசரேத்து தொழுகைக்கூடத்தில் அறிவித்த இயேசு, இறையாட்சி ஒவ்வொருவர் உள்ளத்திலும் விதைக்கப்பட்டு, வளர்ந்து வருகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

“இதோ இங்கே, அதோ அங்கே” என்று சொல்லுமளவு, இறையாட்சி வெளி ஆடம்பரங்களோடு, விளம்பரத்தோடு வருவது அல்ல என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, மறைந்து நிற்கும், அமைதியாக வளரும் இறையாட்சியை நம்புவதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்ற கேள்வியை எழுப்பினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

By admin