குமுதினி படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு உணர்வுபூர்வமான முறையில் நெடுந்தீவு இறங்குதுறை பிரதேசத்தில் 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி 64 பயணிகளுடன் பயணித்த குமுதினி படகை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வழிமறித்து குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்யததை நினைவுகூர்ந்து இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
நெடுந்தீவு இறங்குதுறை பிரதேசத்திலுள்ள புனித சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் அவர்களின் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து நெடுந்தீவு இறங்குதுறையிலுள்ள நினைவாலய வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. நினைவேந்தல் குழுமத்தின் நெடுந்தீவு பிரதேச தலைவர் ருத்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் நினைவுகஞ்சி வழங்கும் நிகழ்வும் அங்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், உயிர் இழந்தவர்களின் உறவினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

By admin