முல்லைத்தீவு மாவட்டம், சிலாவத்தைப் பகுதியில் உள்ள சுவாமி தோட்டக்காணியில் குடியிருக்கும் மக்களுக்கு காணி வழங்கும் நிகழ்வு 29.07.2021 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இப்பகுதியில் ஏறத்தாழ 95 குடும்பங்கள், முதியோர் சங்கம், முன்பள்ளி, சைவ ஆலயம், பொது நோக்கு மண்டபம் என்பன அடங்கிய தியோகு நகர் எனும் கிராமம் அமைந்துள்ளது.

இக் கிராமத்தில் உள்ள மக்களுக்கும், அமைப்புகளுக்கும் சைவ ஆலயத்திற்குமாக யாழ் கத்தோலிக்க திருஅவைக்குரிய காணியை யாழ்ப்பாணம் கத்தோலிக்க ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை பகிர்ந்தளித்துள்ளார்.குறித்த தியோகு நகர் எனும் கிராம மக்களுக்குக் காணி வழங்கும் நடவடிக்கையில், முதற்தொகுதியாக 50 உரிமங்கள், நன்கொடை உறுதிகளாக மக்களுக்கு வழங்கப்பட்டன. அவற்றை யாழ் மறைமாவட்ட ஆயரின் பெயரால், மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்கள் மக்களுக்கு கையளித்தார். இந் நிகழ்வு சுகாதார வழிகாட்டலுடன் தியோகு நகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் சிறப்புற ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

By admin