மன்னார் மறைமாவட்டத்தில் நானாட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள டிலாசால் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் திறன் வகுப்பறை திறப்புவிழாவும் அதிபர் அருட்சகோதரர் விஜயதாசன் தலைமையில் கடந்த மாதம் 21ஆம் திகதி பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ அவர்களும், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வி. கிறேஸ் தேவதயாளினி தேவராஜா அவர்களும், டிலாசால் அருட் சகோதரர்களின் முன்னை நாள் மாகாண முதல்வர் அருட் சகோதரர் கிறிஸ்ரி குரூஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இத்திறன் வகுப்பறைகளை அப்பாடசாலையின் முன்னாள் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு. லூர்து புவனம் அவர்களும் இலண்டன் நாட்டில் வாழ்ந்துவரும் பழைய மாணவர்களும் அமைத்துள்ளதுடன் மன்னார் மறைமாவட்டத்தின் மூன்று ஆயர்களின் பெயர்களிலே இவ்வகுப்பறைகள் திறந்துவைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரியின் பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 30ஆம் திகதி கல்லூரி மைதானத்தில் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இப்பாடசாலையின் பழைய மாணவனும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வருமாகிய அருட்திரு கிறிஸ்துநாயகம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். இந்நிகழ்வில் குருத்துவ வாழ்வில் 60ஆண்டுகளைப் பூர்த்தி செய்த மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த குருவும், மன்னார் மறைமாவட்டத்தின் முதலாவது குருமுதல்வரும் டிலாசால் கல்லூரியின் பழையமாணவனுமாகிய அருட்திரு சேவியர் குரூஸ் அவர்கள் பாடசாலைச் சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

By admin